கோல லங்காட்:
பூலாவ் கேரி ஸ்ரீ மகா மணியம்மன் துர்கையம்மன் ஆலயத்தை தொடர்ந்து பாதுகாத்து வரும் ஆலய நிர்வாகத்திற்கு எனது பாராட்டுகள்.
மஹிமாவின் தலைவர் டத்தோ ந. சிவக்குமார் இதனை கூறினார்.
பூலாவ் கேரி ஸ்ரீ மகா மணியம்மன் துர்கையம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் விழா இன்று விமரிசையாக நடைபெற்றது.
கேரித் தீவில் பழைய தேயிலைப் பிரட்டு தோட்டத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
இவ்வாலயத்தின் திருப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்த பின் இன்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
ஆலயத் தலைவர் ராகவன், நிர்வாகத்தின் அன்பான அழைப்பைத் தொடர்ந்து இவ்விழாவில் மஹிமாவின் தலைவரும், கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் அறங்காவலருமான டத்தோ என். சிவக்குமார் கலந்து கொண்டார்.
இந்த மகத்தான ஆன்மீக நிகழ்வு தெய்வீக சக்தி, பக்தியால் நிரம்பியது.
இது ஆலயத்துக்கும் அதன் பக்தர்களுக்கும் ஒரு அர்த்தமுள்ள மைல்கல்லைக் குறித்தது.
இந்த புனிதமான கொண்டாட்டத்தைக் காணவும், எல்லாம் வல்லவரின் ஆசீர்வாதங்களைப் பெறவும் பலர் கூடியிருந்தனர்.
இந்த புனிதமான கும்பாபிஷேகம் அனைவருக்கும் நீடித்த அமைதி, செழிப்பு, நல்லிணக்கத்தைக் கொண்டு வரட்டும்.
அதே வேளையில் இவ்வாலயம் மஹிமாவில் அதிகாரப்பூர்வமாக உறுப்பினராக இணைந்துள்ளது.
அதற்கான சான்றிதழும் ஆலயத் தலைவரிடம் வழங்கப்பட்டது.
இந்த ஆலய கும்பாபிஷேக விழாவில் 3,000த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் இவ்வாலயத்திற்கு மின்சார இணைப்பு இல்லை. முழுக்க முழுக்க ஜெனரேட்டர் மூலம் இவ்வாலயம் செயல்படுகிறது.
இப்படி எத்தனை சவால்கள் இருந்தாலும் ஆலயத்தை பல தலைமுறைகளாக பாதுகாத்து வரும் ஆலய நிர்வாகத்திற்கு எனது பாராட்டுகள் என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.