பத்துமலை:
மஹிமாவின் புதிய தலைவராக டத்தோ ந. சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டார்.
மஹிமா எனப்படும் மலேசிய இந்து ஆலய, அமைப்புகளின் பேரவையின் ஆண்டுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
மஹிமாவின் அனைத்து உறுப்பினர்களும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முக்கிய அங்கமாக புதிய நிர்வாகக் குழு தேர்வு செய்யப்பட்டது.
இதில் ந. சிவக்குமார் மஹிமாவின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
நாட்டில் உள்ள ஆலயங்கள் அனைத்தும் ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைக்கப்படும்.
அதே வேளையில் இந்த ஆலயங்களை ஒன்றிணைத்து சிறப்பு அகப்பக்கமும் உருவாக்கப்படும்.
நாடு முழுவதும் உள்ள ஆலயங்களை ஒன்றிணைக்கும் வகையில் மஹிமா சிறப்புப் பயணத்தை மேற்கொள்ள உள்ளது.
இப் பயணத்தின் போது ஆலய நிர்வாகிகளை சந்தித்து பேசுவதுடன் அங்கு உள்ள பிரச்சினைகளும் கண்டறியப்படும்.
இதை தவிர்த்து பல ஆலயங்கள் முறையாக பதிவு செய்யாமல் இருப்பது நாட்டில் பெரும் சர்ச்சையாக உள்ளது.
குறிப்பாக பல ஆலயங்கள் ஒரு சில பிரச்சினைகளால் உடைபடுகிறது. வரும் காலங்களில் ஆலயங்கள் உடைபட்டாலும் அது ஆகம விதிப்படி மேற்கொள்ளப்பட வேண்டும்.
இது போன்ற பிரச்சனைக்கெல்லாம் தீர்வு காண மஹிமா உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்