கல்வி உதவிகள் பெற வேண்டும் என்றால் மாணவர்கள் ஜசெகவில் உறுப்பினர்களாக இணைய வேண்டுமா?: டத்தோ சிவக்குமார் கேள்வி

கோலாலம்பூர்:

கல்வி உதவிகள் பெற வேண்டும் என்றால் மாணவர்கள் ஜசெகவில் உறுப்பினர்களாக இணைய வேண்டுமா?

டிஎஸ்கே எனப்படும் மலேசிய டைனமிக் சினார் காசே சமூக நல அமைப்பின் தலைவர் டத்தோ ந. சிவக்குமார் இதுகுறித்து கேள்வி எழுப்பி உள்ளார். 

கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் அரசியல் கட்சிகள் செயல்பட வேண்டும். ஆனால் பேரா மாநில ஜசெக தலைவர் ங்கா கோர் மிங்கின் நிபந்தனை மிகவும் விசித்திரமாக உள்ளது.

சமீபத்தில் பேரா மாநில ஜசெக மாநாட்டில் பேசிய அவர் கட்சியின் கீழ் மாணவர் உதவி நிதி திட்டம் அறிமுகம் செய்யப்படும் என அறிவித்தார்.

பொது பல்கலைக்கழகங்களில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு 1000 ரிங்கிட் வழங்கப்படும்.

ஆனால் அம்மாணவர்கள் ஜசெகவின் உறுப்பினராக இருக்க வேண்டும் என கூறியுள்ளார். அவரின் இந்த அறிவிப்பு பல கேள்விகளை எழுப்புகிறது.

மாணவர்களை ஊக்குவிக்க அவர் இந்நிதியை அறிவித்தாரா? அல்லது கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தூண்டில் போடுகிறாரா என்று டத்தோ சிவக்குமார் கேள்வி எழுப்பினார்.